கொரோனா ஊரடங்கில் பனைமரம் ஏறி குடும்பத்திற்கு உதவும் மாணவர்
By: Nagaraj Thu, 30 July 2020 6:32:13 PM
பனைமரம் ஏறி குடும்பத்திற்கு உதவும் மாணவர்... கொரோனா ஊரடங்கு காலத்தில் 11ஆவது வகுப்பு மாணவர் ஒருவர், தவிக்கும் தங்கள் குடும்பத்திற்கு உதவும் வகையில், பனை மரம் ஏறும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
ஒல்லியான வலுவான தேகம் - இடுப்பில் கயிறுடன் சொருகி வைக்கப்பட்ட அரிவாள் சகிதம் அதிகாலை இரு சக்கர வாகனத்தில் பனை ஏறும் தொழிலுக்கு புறப்படுகிறார், இந்த 18 வயது இளைஞர் கிருஷ்ண பெருமாள். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ளஅரசர் குளத்தைச் சேர்ந்த உப்பு வியாபாரி பாலகிருஷ்ணன் என்பவரின் மகனான கிருஷ்ண பெருமாள், 11வது வகுப்பு படித்து வருகிறார். கொரோனா ஊரடங்கு காலத்தில் வருவாய் ஈட்ட, இவர் தனது தாத்தாவின் தொழிலை கையிலெடுத்துள்ளார்.
கரணம் தப்பினால் மரணம் விளைவிக்கும் ஆபத்து நிறைந்த பனை ஏறும் தொழிலில் ஆர்வமாக ஈடுபட்டு வரும் கிருஷ்ண பெருமாளுக்கு அவரது தங்கை கண்ணகி உதவி வருகிறார். பனையேறும் தொழிலில் மகிழ்ச்சியுடன் ஈடுபடுவதாக கூறும் கிருஷ்ண பெருமாள், இத் தொழிலில் இளைஞர்களை பங்கேற்க, ஊக்குவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
மாணவர் கிருஷ்ண பெருமாள், நாளொன்றுக்கு 5 பனை மரங்கள் ஏறுகிறார். அவரது தங்கை கண்ணகி, பனையில் இருந்து இறக்கும் பதநீரை காய்ச்சும் இடத்திற்கு எடுத்துச் சென்று, கருப்பட்டி தயாரிக்க உதவுகிறார்.
இவ்வாறு தயாராகும் கருப்பட்டிகளை விற்பனை செய்வதின் மூலம் கிடைக்கும் பணம்,
வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டு உள்ள தங்கள் குடும்பத்திற்கு உதவியாக
இருப்பதாக கண்ணகி தெரிவித்தார்.
தமிழகத்தின் மாநில மரம் ஆக பனை மரம்
இருந்த போதிலும், இதன் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து, பனை ஏறும்
தொழிலும் அழிந்து வருகிறது. உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் இந்த தொழிலில்
உழைப்புக்கேற்ற வருமானம் கிடைப்பதில்லை என்பது நிதர்சனம்.
குறிப்பாக,
இன்சூரன்ஸ் வசதியோ - பாதுகாப்பு உபகரண வசதியோ கிடையாது. எனவே, அழிந்து
வரும் பனை ஏறும் தொழிலை பாதுகாக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்பதே இத் தொழிலை நம்பி இருப்பவர்களின் கோரிக்கையாக உள்ளது.