இரு கைகளால் ஒரு நிமிடத்தில் 45 வார்த்தைகள் எழுதி மாணவி சாதனை
By: Nagaraj Thu, 17 Sept 2020 7:39:27 PM
மாணவியின் உலக சாதனை... மங்களூருவில், ஒரு நிமிடத்தில் இரு கைகளால் 45 வார்த்தைகளை எழுதி மாணவி உலக சாதனை படைத்து உள்ளார். அவரது இந்த சாதனைக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
பொதுவாக மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை இருக்கும். அதுபோல மங்களூருவை சேர்ந்த 17 வயது மாணவி இரு கைகளாலும் ஒரே நேரத்தில் எழுதும் திறமை உள்ளது.
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவை சேர்ந்தவர் கோபட்கர். இவரது மனைவி சுமா பட்கர். இந்த தம்பதியின் மகள் ஆதிஸ்ரூபா (17). கோபட்கர் மங்களூருவில் ஒரு கல்வி பயிற்சி மையத்தை நடத்தி வருகிறார். அந்த பயிற்சி மையத்தில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இதுபோல அந்த பயிற்சி மையத்தில் ஆதிஸ்ரூபாவும் படித்து வருகிறார்.
இந்த பயிற்சி மையத்தில் படித்து வருபவர்களுக்கு தனித்திறனை வளர்த்து
கொள்வதற்காக பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அதுபோல
ஆதிஸ்ரூபாவுக்கும் இரு கைகளையும் பயன்படுத்தி எழுதும் பயிற்சி
அளிக்கப்பட்டது.
அவரும் அந்த பயிற்சியை ஆர்வத்துடன் கற்று வந்தார்.
தற்போது 2 கைகளை ஒரே நேரத்தில் பயன்படுத்தி எழுதி வருகிறார். அதாவது வலது
கையில் எழுதும் வார்த்தையை, இடது கையையும் பயன்படுத்தி எழுதி வருகிறார்.
இதுபற்றி
அறிந்த உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஒரு கல்வி நிறுவனம் மங்களூருவுக்கு
வந்து, ஆதிஸ்ரூபாவுக்கு 2 கைகளை பயன்படுத்தி எழுதும் தேர்வை நடத்தியது.
இதில் கலந்து கொண்ட ஆதிஸ்ரூபா ஒரு நிமிடத்தில் இரு கைகளை பயன்படுத்தி 45
வார்த்தைகளை எழுதி சாதனை படைத்தார்.
இதனை பார்த்த ஆச்சரியம் அடைந்த
உத்தர பிரதேச கல்வி நிறுவனத்தினர், ஆதிஸ்ரூபாவை வெகுவாக பாராட்டி அவருக்கு
விருது வழங்கி கவுரவித்தனர். மேலும் ஒரு நிமிடத்தில் இரு கைகளால் 25
வார்த்தைகள் எழுதியதே இதற்கு முன்பு உலக சாதனையாக இருந்தது. அந்த சாதனையை
தற்போது ஆதிஸ்ரூபா தகர்த்து உலக சாதனை படைத்து உள்ளார் என்று கல்வி
நிறுவனம் அறிவித்து உள்ளது.
ஆதிஸ்ரூபா இரு கைகளை பயன்படுத்தி
எழுதும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. அந்த வீடியோவை
பார்த்தவர்கள் ஆதிஸ்ரூபாவுக்கு பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.