போதிய பஸ் வசதி இல்லை எனக்கூறி மாணவர்கள் போராட்டம்
By: Nagaraj Tue, 18 Oct 2022 10:07:04 PM
திருவண்ணாமலை : மாணவர்கள் போராட்டம்... திருவண்ணாமலையில் உள்ள காளையன் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் போளூர், கலசப்பாக்கம், தண்டராம்பட்டு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.
இவர்கள் தினமும் அரசு பஸ்கள் மூலம் திருவண்ணாமலைக்கு வருகின்றனர். பின்னர் திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து அரசு டவுன் பேருந்துகள் மூலம் கல்லூரிக்கு செல்கின்றனர். பஸ் நிலையத்தில் போதிய பஸ் வசதி இல்லாததால், மாணவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு கல்லூரிக்கு செல்ல முடியாத நிலை உள்ளது.
குறிப்பிட்ட பஸ்களில் பயணிக்கும் போது, மாணவர்கள் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி நடந்து செல்கின்றனர். இந்நிலையில், இன்று காலை திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் கல்லூரிக்கு செல்ல போதிய வசதியின்றி மாணவர்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், மற்ற பஸ்கள் பஸ் நிலையத்திற்குள் செல்ல
முடியாதபடி திடீரென மறியலில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை கிழக்கு போலீஸார்
பேருந்து நிலையத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம்
பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது கல்லூரிக்கு செல்ல கூடுதல்
பஸ்கள் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து மாணவர்கள்
கல்லூரிக்கு செல்ல தேவையான போக்குவரத்து வசதி செய்து தர போக்குவரத்து துறை
அதிகாரியிடம் பேசுவதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, போராட்டத்தில்
ஈடுபட்ட மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.