- வீடு›
- செய்திகள்›
- இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை நீதிமன்றம் ரத்து செய்துவிடும் என மாணவர்கள் நினைக்கக்கூடாது - மத்திய அரசு
இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை நீதிமன்றம் ரத்து செய்துவிடும் என மாணவர்கள் நினைக்கக்கூடாது - மத்திய அரசு
By: Karunakaran Fri, 31 July 2020 6:08:39 PM
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், பல்கலைக்கழக, கல்லூரி இறுதியாண்டு தேர்வுகள் நடத்தப்பட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. செப்டம்பர் மாதத்திற்குள் இறுதியாண்டு தேர்வுகளை கட்டாயம் நடத்த வேண்டும் என யுஜிசி தெரிவித்துள்ளது.
இதனை எதிர்த்தும், இறுதியாண்டு செமஸ்டர் தேர்வை ரத்து செய்யக்கோரியும் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 31 மாணவர்கள் வழக்குகள் தொடர்ந்துள்ளனர். இறுதியாண்டு தேர்வை ரத்து செய்யம் திட்டம் இல்லை. அனைத்து பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிறுவனங்களும் செப்டம்பர் 2020 இறுதிக்குள் கடைசி செமஸ்டர் அல்லது இறுதி ஆண்டு தேர்வை நடத்த வேண்டும் என யுஜிசி பிராமண தாக்கல் செய்துள்ளது.
இந்த வழக்கு விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றபோது, உள்துறை அமைச்சகத்தின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துமாறு யு.ஜி.சி.யை நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர். இதுகுறித்து யுஜிசி சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மாணவர்கள் தேர்வுக்குத் தயாராக வேண்டும் செமஸ்டர் தேர்வை நீதிமன்றம் ரத்து செய்துவிடும் என்ற எண்ணத்தில் மாணவர்கள் சிக்கிவிடக் கூடாது. மாணவர்கள் தேர்வுக்குத் தயாராக முடியாது என்ற எண்ணத்தில் யாரும் இருக்கக்கூடாது என்று கூறினார்.
மேலும் ஆகஸ்ட் 3ம் தேதி இந்த வழக்கில் யுஜிசி பதில் மனு தாக்கல் செய்ய உள்ளதாக துஷார் மேத்தா தெரிவித்துள்ளார். அதன்பின் இந்த வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 10ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மகாராஷ்டிர மாநில பேரிடர் மேலாண்மை குழுவும் பதில் மனு தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.