- வீடு›
- செய்திகள்›
- ஜோ பைடன் பதவியேற்கும் முன் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இரட்டிப்பாகும் என ஆய்வு
ஜோ பைடன் பதவியேற்கும் முன் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இரட்டிப்பாகும் என ஆய்வு
By: Karunakaran Tue, 24 Nov 2020 11:31:58 AM
உலக அளவில் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறது. குறிப்பாக கடந்த சில வாரங்களாக அங்கு வைரஸ் பரவல் அதிவேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. தற்போது அங்கு 1 கோடியே 20 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் அங்கு அண்மையில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 20-ந்தேதி அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக பதவி ஏற்கிறார். இந்நிலையில் ஜோ பைடன் பதவியேற்பதற்கு முன்பாக அமெரிக்காவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை இரட்டிப்பாகும் என ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையில், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் போன்ற கொரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பதில் தற்போதுள்ள இதே நிலை நீடித்தால் அடுத்த ஆண்டு ஜனவரி இறுதிக்குள் அமெரிக்காவில் 2 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதில், மொத்த பாதிப்பில் 10 சதவீதம் மட்டுமே இதுவரை கண்டறியப்பட்டுள்ளதாக நாங்கள் கருதுகிறோம். எனவே கொரோனா பரிசோதனையை இன்னும் அதிகரிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த ஆண்டு இறுதிக்குள் அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.