விசாகப்பட்டின மருந்து கம்பெனியில் நேற்று இரவு திடீரென தீ விபத்து
By: Karunakaran Tue, 14 July 2020 09:57:47 AM
ஆந்திர பிரதேசம் மாநிலம் விசாகப்பட்டினத்தில் மருந்து கம்பெனி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த மருந்து கம்பெனியில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் பயங்கர வெடிசத்தம் கேட்டது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்தனர்.
9 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அப்பகுதியில் சுற்றி இருந்தவர்களை பத்திரமாக மீட்டனர். அதன்பின், வெகு நேரம் போராடி தீயை அணைத்து வருகின்றனர். இந்த தீ விபத்தில் தொழிலாளி ஒருவர் காயம் அடைந்தார்.தற்போது அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
தீ விபத்துக்கான காரணம் வெளியாகவில்லை. நள்ளிரவில் மருந்து கம்பெனியில் ஏற்பட்ட இந்த தீ விபத்து சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஏற்கனவே, விசாகப்பட்டினத்தில் ரசாயன தொழிற்சாலையில் வாயுக்கசிவு ஏற்பட்டு 11 பேர் உயிரிழந்தனர். மேலும், 100க்கும் மேற்பட்டோர் உடல் நலம் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. விசாகப்பட்டினத்தில் அடுத்தடுத்து தீ விபத்து ஏற்படும் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.