வடக்குக் கிழக்குப் பகுதியில் நடக்கும் ஹர்த்தால் போராட்டத்திற்கு ஆதரவு
By: Nagaraj Mon, 28 Sept 2020 12:40:53 PM
ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவு... தியாகி திலீபன் நினைவேந்தல் நிகழ்வை நடத்தவிடாமல் நீதிமன்ற உத்தரவின் மூலம் தடை விதித்து தமிழ் மக்கள் மீது அடக்குமுறைப் பிரயோகம் செய்தமையைக் கண்டித்துத் தமிழர்தாயகப் பிரதேசமான வடக்குக் கிழக்குப் பகுதியில் நடைபெறவுள்ள ஹர்த்தால் போராட்டத்திற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் பூரண ஆதரவு தெரிவித்துள்ளது.
இன்று திங்கட்கிழமை ஹர்த்தால் இடம்பெறவுள்ளமையினால் ஆசிரியர்கள், மாணவர்கள் பாடசாலைகளுக்குச் சமூகமளிக்கத் தேவையில்லையென இலங்கை ஆசிரியர் சங்கம் ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்ராலின், வடக்குக் கிழக்குப் பாடசாலைகளில் உள்ள ஆசிரியர்கள் சுகவின விடுமுறையில் வீட்டில் நிற்குமாறு கோரிக்கை விடுத்தார்.
அரசாங்க உத்தியோகத்தர்கள் ஹர்த்தாலுக்கு ஆதரவு கொடுக்க முடியாதெனக் கொழும்பில் உள்ள அதிகாரிகள் கூற முடியும். ஆனால் சுகவீன விடுமுறையில் நிற்பதற்கு ஆசிரியர்களுக்கு உரிமை உண்டு என அவர் தெரிவித்தார்.
உயிர் நீர்த்தவர்களை நினைவுகூர யாரும் தடை விதிக்க முடியாது. ஆனால் இலங்கை
நீதித்துறை மூலம் அரசாங்கம் விதித்த தடையை வன்மையாகக் கண்டிப்பதாகக் கூறிய
அவர் ஒரு சமூகத்தின் மீது அடக்குமுறையைப் பிரயோகிக்க முடியாதெனவும்
சுட்டிக்காட்டினார்.
ஆசிரியர் சங்கம் என்ற முறையில் போராட்டத்திற்கு
ஆதரவு தெரிவிப்பதுடன் மாணவர்களை இன்று (திங்கட்கிழமை) பாடசாலைக்குச் செல்ல
வேண்டாமென்றும் கேட்டுக் கொண்டார்.
இலங்கை ஆசிரியர் சங்கம்
கொழும்பை மையமாகக் கொண்டு வடக்குக் கிழக்கு உள்ளிட்ட இலங்கைத் தீவின்
அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தமிழ், சிங்கள ஆசிரியர்களை உறுப்பினர்களாகக்
கொண்டு இயங்கி வருகின்றது.