புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவு
By: Karunakaran Tue, 09 June 2020 2:07:49 PM
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வெளிமாநிலங்களில் வேலை செய்ய சென்ற புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் சிக்கியுள்ளனர். இதனால் தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கக் கோரியும், அடிப்படை வசதிகள் கேட்டும் பல்வேறு பகுதகளில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.
தனிமனித இடைவெளி உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் இந்த போராட்டத்தின்போது மீறப்பட்டன. இதனால் ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக பல்வேறு மாநிலங்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் இதுகுறித்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, புலம்பெயர்ந்த தொழிலாளர்களை ஒழுங்குபடுத்தப்பட்ட முறையில் அடையாளம் காண மத்திய, மாநில அரசுகள் பட்டியலை தயாரிக்க வேண்டும். புலம்பெயர் தொழிலாளர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தையும் திரும்ப பெறுவது பற்றி அந்தந்த மாநில அரசுகள் பரிசீலனை செய்ய வேண்டும் எனவும், 15 நாளில் அவர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
மேலும், அவர்கள் மீண்டும் பணிக்கு திரும்ப விரும்பினால் தேவையான உதவிகளை செய்ய வேண்டும் எனவும், வேலைவாய்ப்பை உறுதி செய்ய இலவச ஆலோசனை மையத்தை ஏற்படுத்த வேண்டும் எனவும் உச்ச நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.