இங்கிலாந்தில் சந்தேக நபரின் கழுத்தை காலால் நெரித்த போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட்
By: Karunakaran Sat, 18 July 2020 09:13:08 AM
அமெரிக்காவின் மின்னியாபொலிஸ் நகரில் கடந்த மே மாதம் ஜார்ஜ் பிளாய்டு என்ற கருப்பினத்தவரை
போலீசார் கைது செய்ய முயற்சித்தபோது, ஜார்ஜின் கழுத்தில் தனது ழுழங்காலால் அழுத்தி அவரை எழுந்திருக்க முடியாமல் போலீஸ் அதிகாரி ஒருவர் செய்தார். இதனால் ஜார்ஜின் குரல்வளை நெரிக்கப்பட்டு, அவர் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உலகிலுள்ள பல நாடுகளில் இந்த சம்பவத்திற்கு எதிராக ’பிளாக் லிவ்ஸ் மேட்டர்' போராட்டம் நடைபெற்றது. தற்போது ஜார்ஜ் பிளாய்டு கைது சம்பவம் போன்றதொரு கைது சம்பவம் இங்கிலாந்தில் நடைபெற்றுள்ளது.
லண்டனின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள இஸ்லிங்டன் என்ற நகரின் சாலைப்பகுதியில் சிலர் மோதலில் ஈடுபடுவதாக கடந்த வியாழக்கிழமை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, போலீசார் அங்கு சென்று அங்கு கூடியிருந்த சிலரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அங்கு இருந்த கருப்பினத்தவரான ஒருவரிடம் கத்தி இருந்ததாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
அதன்பின், அந்த சந்தேக நபரை கைது செய்ய இரண்டு போலீசார் முயற்சித்தபோது, அந்த நபர் ஒத்துழைக்காததால் போலீசார் அந்த நபரை வலுக்கட்டாயமாக தரையில் தள்ளி அந்த நபரின் கழுத்தில் போலீஸ் அதிகாரி தனது காலால் நெரித்துள்ளார். இதனை சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர். தற்போது, கைது நடவடிக்கையின் போது விதிமுறைகளுக்கு மாறாக செயல்பட்டு சந்தேக நபரின் கழுத்தை முழங்காலால் நெரித்த போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அருகில் இருந்த மற்றொரு போலீஸ் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.