இலங்கையில் பெரும்பான்மையான இடங்களில் அவசர ஆம்புலன்ஸ் சேவை நிறுத்தம்
By: vaithegi Tue, 12 July 2022 5:04:21 PM
இலங்கை: இலங்கையில் கடந்த சில மாதங்களாக மிக கடுமையான பொருளாதார சிக்கல் நிலவி கொண்டு வருகிறது. இலங்கையில் நிலவி வரும் எரிபொருள் தட்டுப்பாட்டின் காரணமாக பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மேலும், பெட்ரோல் நிலையங்களிலேயே பல மணி நேரங்கள் காத்திருந்து பெட்ரோல், டீசல் வாங்க வேண்டிய நிலை இருக்கிறது. எந்த நாடுகளும் இலங்கைக்கு போதுமான எரிபொருளை கொடுக்க முன்வரவில்லை. இத்துடன், எரிபொருள் தட்டுப்பாட்டின் காரணமாக அனைத்துவித போக்குவரத்துகளும் சிக்கலில் மாட்டி தவித்துக் கொண்டிருக்கிறது.
எரிபொருள் மட்டுமல்லாமல் காய்கறிகள், அவசர உதவிக்கு தேவைப்படும் மருந்துகள் என அனைத்திற்கும் மிக கடும் தட்டுப்பாடு நிலவி கொண்டு வருகிறது. இலங்கையில் உயிர் வாழ்வதற்கு தேவையான எந்த வித ஆதாரமும் இல்லாமல் மக்கள் கடுமையான சிக்கலில் மாட்டியுள்ளனர்.
மேலும், எரிபொருள் தட்டுப்பாட்டை ஓரளவுக்கு சமாளிக்க பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. எரிபொருள் தட்டுப்பாட்டை குறைக்க பல மணி நேரங்கள் மின்தடை செய்யப்படுகிறது. இத்தனை நடவடிக்கைகள் செய்தும் கூட இலங்கையில் நிலைமை மோசமாகி கொண்டே செல்கிறது.
இதனால் இலங்கை மக்கள் இலங்கை அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இலங்கையில் நிலவும் பெட்ரோல் தட்டுப்பாட்டினால் இலங்கையில் உள்ள பெரும்பான்மையான இடங்களில் மருத்துவ அவசர ஆம்புலன்ஸ் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
அதாவது, அவசர தேவைக்காக அழைக்கப்படும் ஆம்புலன்ஸ் உதவி எண்ணான 1990 என்கிற எண்ணிற்கு அழைப்பதை மக்கள் தவிர்க்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அனுராதபுரம், ரத்தினபுரி, வவுனியா, முல்லைத்தீவு போன்ற பகுதிகளுக்கு ஆம்புலன்ஸ் சேவை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.