கேரள தங்கம் கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னா சுரேசுக்கு கொரோனா பாதிப்பு இல்லை
By: Karunakaran Mon, 13 July 2020 1:38:07 PM
திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் சரக்கு விமானத்தில் 30 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்டது. இதனை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கடந்த 5-ந்தேதி கைப்பற்றினர். இந்த சம்பவம் தொடர்பாக தூதரக முன்னாள் ஊழியர் சரித் ஏற்கனவே கைது செய்யப்பட்டார்.
இந்த கடத்தலில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் என்ற மாநில தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.) துறை முன்னாள் ஊழியர் மற்றும் சந்தீப் நாயர் ஆகியோர் தலைமறைவாகினர். மேலும், எர்ணாகுளத்தை சேர்ந்த பாசில் பரீத் மீதும் அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் இருவரும் நேற்று முன்தினம் பெங்களூருவில் சிக்கினர்.
இருவரும் நேற்று காலையில் கேரளாவின் கொச்சிக்கு கொண்டு சென்றபோது, ஆலுவாவில் உள்ள ஆஸ்பத்திரியில் இருவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்பின், இருவரும் தேசிய புலனாய்வு அமைப்பு சிறப்பு கோர்ட்டில் இருவரும் ஆஜர்படுத்தப்பட்டனர். 30-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்நிலையில், இருவரும் கொரோனா பரிசோதனைக்காக அதற்கான மையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். கொரோனா பரிசோதனை நடைபெற்றதில் இருவருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என தெரிய வந்துள்ளது. அதன்பின், இன்று அவர்கள் தேசிய புலனாய்வு முகமை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படுகின்றனர்.