நீச்சல் குளம் பயன்படுத்த முடியாத நிலை... வெயிலில் தவிக்கும் யானை
By: Nagaraj Tue, 07 June 2022 5:36:59 PM
ராமேஸ்வரம்: வெயிலில் தவிக்கும் யானை... ராமேஸ்வரம் கோயில் யானையின் நீச்சல் குளம் பயன்படுத்த முடியாமல் உள்ளது. இதனால் சுட்டெரிக்கும் வெயிலில் கோயில் யானை தவிக்கிறது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு 2012ல் ராமலட்சுமி எனும் யானையை கொண்டு வந்தனர். யானை நிற்கும் இடத்தில் தகர கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது. அதிலும் வெயில் உள்ளே வரும் விதத்தில் உள்ளது.
கோடை காலத்தில் சுட்டெரிக்கும் வெயிலில் யானை தவித்தது. இதனால் 2021ல் கோயிலில் இருந்து அரை கி.மீ., துாரத்தில் ராம லட்சுமிக்கு நீச்சல் குளம், ஷவர் பாத் அமைக்கப்பட்டது. துவக்கத்தில் இங்கு உற்சாகமாக குளித்து சென்ற ராமலட்சுமி காலப்போக்கில் பெரிதும் சிரமப்பட்டது.
கோயில் முதல் நீச்சல் குளம் வரை உள்ள சாலை குண்டும், குழியுமாக இருந்தது.
மேலும் வழியெங்கும் போக்குவரத்து நெரிசல், வாகன இரைச்சலும் இருந்ததால் யானை
ராமலட்சுமி மிரண்டது. அசம்பாவிதங்களை தவிர்க்க யானையை நீச்சல் குளத்திற்கு
அழைத்து செல்வதை தவிர்த்தனர்.
தற்போது நீச்சல் குளத்தை ஆடு, மாடு,
நாய்கள் அசுத்தமாக்கி பயன்படுத்த முடியாதபடி உள்ளது. எனவே கோயில்
வளாகத்தில் உள்ள வடக்கு நந்தவனத்தில் யானைக்கு இயற்கை சூழலுடன் பிரத்யேக
நீச்சல்குளம், ஷவர்பாத் அமைத்து புத்துணர்வு அளிக்க அறநிலைதுறை ஆணையர்
உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.