அமைதிப்பேச்சுவார்த்தையை நாளையே தொடங்க தயார் - தலிபான் பயங்கரவாத அமைப்பு அறிவிப்பு
By: Karunakaran Fri, 11 Sept 2020 09:45:23 AM
ஆப்கானிஸ்தானில் 2001 முதல் உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர, அந்நாட்டு அரசின் உதவியோடு கடந்த பிப்ரவரியில் தலிபான்களுடன் அமெரிக்கா அமைதி ஒப்பந்தம் செய்துகொண்டது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆப்கானிஸ்தான் இருந்து ஆயிரக்கணக்கான அமெரிக்க படையினர் திரும்பப்பெறப்பட்டுள்ளனர். மேலும் ஆப்கானிஸ்தான் சிறையில் உள்ள 5 ஆயிரம் பயங்கரவாதிகளை விடுதலை செய்யவேண்டும் என தலிபான்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் சிறையில் பலகட்டங்களாக 4 ஆயிரத்து 991 தலிபான் பயங்கரவாதிகள் விடுதலை செய்யப்பட்டனர். தலிபான்கள் பிடியில் இருந்த ஆப்கானிஸ்தான் வீரர்கள் பலரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால் பயங்கரவாதிகளில் 9 பேர் மட்டும் தற்போதுவரை விடுதலை செய்யப்படவில்லை. இவர்கள், ஆப்கானிஸ்தான் அரசு - தலிபான் அமைப்பு இடையே நடைபெறும் பேச்சுவார்த்தைக்கு பிணையாக இருப்பார்கள் என தகவல் வெளியானது.
இந்நிலையில், தங்களுடன் அமைதிப்பேச்சுவார்த்தை நடத்த வருமாறு ஆப்கானிஸ்தான் மற்றும் அமெரிக்க அரசுகளுக்கு தலிபான் பயங்கரவாதிகள் அமைப்பு இன்று அழைப்பு விடுத்துள்ளது. அந்த அழைப்பில் பேச்சுவார்த்தையை நாளையே தொடங்கலாம் எனவும் தலிபான்கள் தெரிவித்துள்ளதையடுத்து, தலிபான்களின் அழைப்பிற்கு அமெரிக்க மற்றும் ஆப்கானிஸ்தான் அரசுகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
இந்நிலையில், கத்தார் நாட்டின் தலைநகர் தோகாவில் நடைபெற உள்ள இந்த அமைதிப்பேச்சுவார்த்தையில் பங்கேற்க அமெரிக்க அரசு சார்பில் அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ இன்று கதார் புறப்பட்டு செல்கிறார். அமெரிக்கா அரசுகள் இணைந்து தலிபான் பயங்கரவாதிகளுடன் மேற்கொள்ளும் அமைதிப்பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படும் பட்சத்தில் 20 ஆண்டுகளாக நீடித்துவரும் உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து அமைதி திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.