பதற்றத்தை தணிப்பதற்காக இந்தியா-சீனா எல்லையில் இன்று பேச்சுவார்த்தை
By: Monisha Sat, 06 June 2020 5:17:10 PM
இந்தியா-சீனா இடையிலான 3 ஆயிரத்து 488 கி.மீ. நீள எல்லையில் பல்வேறு இடங்களில் எல்லை பிரச்சனை நிலவி வருகிறது. கடந்த மாதம் 5-ந்தேதி, அந்த இடத்தில் உள்ள லடாக் எல்லையில் சீன ராணுவம் மற்றும் இந்திய ராணுவத்தினர் இடையே இருதரப்பு மோதல் நடந்தது. இதில் சிலர் காயமடைந்தனர். இதைத்தொடர்ந்து, இரு நாட்டு ராணுவத்தினரும் படைகளை குவித்ததால், அங்கு சுமார் ஒரு மாதமாக பதற்றம் நிலவுகிறது.
இதையடுத்து சிக்கலுக்கு தீர்வு காண கடந்த 2-ந் தேதி, மேஜர் ஜெனரல் அந்தஸ்துள்ள அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து, லெப்டினன்ட் ஜெனரல் நிலையிலான அதிகாரிகளிடையிலான உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி, உண்மையான எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டின் சீன பகுதியான மோல்டோ என்ற இடத்தில் இன்று பேச்சுவார்த்தை தொடங்கியது. பதற்றத்தை தணிப்பதற்காக சில திட்டங்கள் முன்வைக்கப்பட்டு, அதனை நடைமுறைப்படுத்துவது குறித்து பேசப்படுகிறது.
இந்தியா தரப்பில் 14-வது படைப்பிரிவு கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் ஹரீந்தர் சிங், சீனா தரப்பில் தெற்கு ஜின்சியாங் ராணுவ பிரிவு கமாண்டர் லின் லியூ ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இரு தரப்பிலும் முந்தைய பேச்சுவார்த்தைகளில் பங்கேற்ற அதிகாரிகளும் இன்றைய பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளனர்.