- வீடு›
- செய்திகள்›
- தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மறுகூட்டல் மதிப்பெண் பட்டியல் நாளை வெளியீடு
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மறுகூட்டல் மதிப்பெண் பட்டியல் நாளை வெளியீடு
By: vaithegi Tue, 26 July 2022 4:54:08 PM
தமிழகம் : தமிழகத்தில் 2 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு தான் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. அதாவது, 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6 ஆம் தேதி முதல் மே 30 ஆம் தேதி வரைக்கும் பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. இதனையடுத்து, பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 20 ஆம் தேதி வெளியிடப்பட்டது.
மேலும் கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிட்டு பார்க்கையில் இந்தாண்டு 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்ச்சி விகிதம் மிகவும் குறைவாக இருந்தது. இதையடுத்து, 10 ஆம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு கூடிய விரைவில் மறுதேர்வு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து மறுதேர்விற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியிலேயே மறுதேர்விற்கு விண்ணப்பித்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இது மட்டுமல்லாமல் மறுகூட்டலுக்கும் ஏராளமான மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அதன் அடிப்படையில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் பெற்ற தேர்வர்களது பதிவெண்கள் பட்டியல் மட்டும் நாளை (ஜூலை 27) பிற்பகல் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முடிவை தெரிந்துகொள்ள விரும்பும் மாணவர்கள் www.dge.tn.gov.in என்கிற இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று SSLC MAY 2022 RETOTAL RESULT என்பதை கிளிக் செய்து மறுகூட்டல் மதிப்பெண்ணை தெரிந்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாற்றம் செய்யப்பட்ட தேர்வர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை www.dge.tn.nic.in என்கிற இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த பட்டியலில் இடம் பெறாத மாணவர்களின் விடைத்தாட்களில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.