அரசு அலுவலகங்களில் 50 சதவீத பணியாளர்கள் பணியாற்ற தமிழக அரசு அறிவிப்பு
By: Monisha Mon, 06 July 2020 11:51:59 AM
சென்னையில் முழு ஊரடங்கு முடிவடைந்ததையடுத்து அரசு அலுவலகங்களில் 50 சதவீத பணியாளர்கள் பணியில் ஈடுபடலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக இன்று வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-
சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நேற்றுடன் முழு ஊரடங்கு முடிவடைந்ததையடுத்து இன்று முதல் வரும் 31 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. முழு ஊரடங்களில் அரசு அலுவலகங்களில் 33 சதவீத பணியாளர்கள் மட்டும் பணியாற்றினால் போதும் என்ற உத்தரவு தற்போது மாற்றப்பட்டு பழைய நடைமுறையே மீண்டும் கொண்டு வரப்பட்டுள்ளது.
அதாவது, அரசு அலுவலகங்களில் 50 சதவீத பணியாளர்கள் சுழற்சி முறையில் பணியாற்ற வேண்டும். வாரத்தின் முதல் இரண்டு நாட்கள் ஒரு பிரிவினரும், அடுத்த இரண்டு நாட்கள் மற்றொரு பிரிவினரும் என இரண்டு குழுக்களாக பணியாற்ற வேண்டும்.
மாற்றுத்திறனாளி பணியாளர்கள், கர்ப்பிணி பெண்கள் பணிக்கு வருவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் பணிக்கு வராத நாட்களும் பணி செய்த நாட்களாகவே எடுத்துக் கொள்ளப்படும். இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.