கொரோனா தொற்று குறித்து மாவட்ட கலெக்டர்களுடன் தமிழக முதலவர் இன்று ஆலோசனை
By: Monisha Fri, 29 May 2020 09:20:08 AM
கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் 4-ம் கட்ட ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. தற்போது தமிழகத்தில் அமலில் உள்ள ஊரடங்கானது வரும் 31-ம் தேதியுடன் நிறைவடைகிறது. எனினும் அதற்கு முன்பே ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வழியே அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.
இதில், தமிழகத்தில் இதுவரை மேற்கொண்ட கொரோனா தடுப்பு பணிகள், ஊரடங்கு முடிவடையும் மே 31-ம் தேதிக்கு பின்னர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், ஊரடங்கு நீட்டிப்பு அல்லது தளர்வு ஆகியவை பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.
முன்னதாக மே 25-ந்தேதி மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். தற்போது தமிழகத்தின் சில மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதாலும், சில மாவட்டங்களில் கட்டுக்குள் இருப்பதாலும் ஊரடங்கு நீடிக்கப்பட்டு தளர்வுகள் அறிவிக்கப்படும் என்றே கூறப்படுகிறது.