தமிழக முதல்வர் நாளை மறுநாள் கள்ளக்குறிச்சி வருகிறார்!
By: Monisha Sat, 08 Aug 2020 3:03:49 PM
தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 6-ந் தேதி முதல் தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். முதலாவது திண்டுக்கல் மாவட்டம் சென்ற முதல்வர் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் பல்வேறு நலத்திட்ட பணிகளையும் துவங்கி வைத்தார். அதேபோல் நெல்லை, மதுரை, தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிலையில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக நாளை மறுநாள்(திங்கட்கிழமை) தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கள்ளக்குறிச்சி வருகிறார். தொடர்ந்து கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும், வளர்ச்சி திட்ட பணிகள் குறித்தும் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். மேலும்-ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
இதையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பணிகளை மாவட்ட கலெக்டர் கிரண் குராலா, கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் குமரகுரு எம்.எல்.ஏ. ஆகியோர் நேற்று மாலை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் அரசு அதிகாரிகளுக்கு நிகழ்ச்சி முன்னேற்பாடுகள், பாதுகாப்பு குறித்து ஆலோசனை வழங்கினர்.
அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் சங்கீதா, மாவட்ட திட்ட இயக்குனர் மகேந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கவுதமன் உள்பட பலர் உடனிருந்தனர்.