ஜப்பானில் கோமாட்ஷூ உற்பத்தி ஆலையை பார்வையிட்ட தமிழக முதல்வர் ஸ்டாலின்
By: Nagaraj Sun, 28 May 2023 10:05:30 PM
ஜப்பான்: தமிழகத்தில் கோமாட்ஷூ தொழிற்சாலையை விரிவாக்கம் செய்வது குறித்து உரிய ஆய்வு நடத்தி நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நிறுவன அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.
முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு ஜப்பான் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் ஒசாகா நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்றார்.
அப்போது, தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்திற்கும், சென்னை அருகே திருப்போரூரில் செயல்பட்டு வரும் ஜப்பானை சேர்ந்த டெய்சல் பாதுகாப்பு அமைப்புக்கும் (DAICEL SAFETY SYSTEM) 83 கோடி ரூபாய் மதிப்பில் விரிவாக்கம் செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதையடுத்து, ஒசாகாவில் அமைந்துள்ள கோமாட்ஷூ உற்பத்தி ஆலையின் செயல்பாடுகளை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். அப்போது, சென்னையில் அடுத்த ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்த முதல்வர் அழைப்பு விடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் சிப்காட்டில் உள்ள கோமாட்ஷூ தொழிற்சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.
இதற்கு அந்நிறுவனத்தின் அதிகாரிகள் உரிய ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். ஒரகடம் சிப்காட் தொழிற்பேட்டையில் சுரங்க உபகரணங்கள், ஹைட்ராலிக் அகழாய்வு இயந்திரம் போன்றவற்றை உலகளாவிய தரநிலையுடன் தயாரித்து சர்வதேச சந்தை தேவைகளை கோமாட்சு நிறுவனம் பூர்த்தி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.