- வீடு›
- செய்திகள்›
- தமிழக முதல்வர் பொதுப்பணி துறை திட்டப்பணிகளுக்கு ரூ230 கோடி மதிப்பில் அடிக்கல் நாட்டு விழா
தமிழக முதல்வர் பொதுப்பணி துறை திட்டப்பணிகளுக்கு ரூ230 கோடி மதிப்பில் அடிக்கல் நாட்டு விழா
By: Karunakaran Thu, 28 May 2020 4:34:29 PM
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில், பொதுப்பணித் துறையின் கீழ் செயல்படும் நீர்வள ஆதாரத் துறை சார்பில் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களின் வழியாக செல்லும் நொய்யல் ஆற்று அமைப்பில் சரகம் 0.0 கி.மீ முதல் 158.35 கி.மீ வரை விரிவாக்குதல், புனரமைத்தல் மற்றும் நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் 230 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பணிகளுக்கு காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடும் விவசாயத்தை மேம்படுத்தும் வகையிலும், மக்களின் குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், கிடைக்கப்பெறும் நீரை வீணாக்காமல் நீர்நிலைகளில் தேக்கி வைக்கும் பொருட்டும், புதிய நீராதாரங்களை உருவாக்கிடவும், அம்மா அவர்களின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு, நீர்வள ஆதாரத் துறை மூலமாக பல்வேறு பாசன மேம்பாட்டுத் திட்டங்களை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.
கால்வாய்களை விரிவாக்குதல்
அந்த வகையில், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களின் வழியாக செல்லும் நொய்யல் ஆற்று அமைப்பில் சரகம் 0.0 கி.மீ முதல் 158.35 கி.மீ வரை உள்ள அணைக்கட்டுகள், குளங்கள், ஆறு மற்றும் கால்வாய்களை விரிவாக்குதல், புனரமைத்தல் மற்றும் நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ், 230 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பணிகளுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்.
தடுப்பணை
மேலும், திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், தெள்ளூர் கிராமத்தின் அருகே செய்யாற்றின் குறுக்கே 5 கோடியே 64 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை,
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், சின்னாரம்பட்டி கிராமத்தின் அருகே பாம்பாறு ஆற்றின் குறுக்கே 2 கோடியே 48 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை,
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், கருங்காலி கிராமத்தின் அருகே அகரம் ஆற்றின் குறுக்கே 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை,
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், கொம்பேரிபட்டி கிராமம், மம்மானியூர் குக்கிராமம் அருகில் கன்னிமார் ஓடையின் குறுக்கே 1 கோடியே 92 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கசிவுநீர் குட்டை;
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், ஆமந்தகடவு கிராமத்தில் புல எண். 135-இல் உப்பாறு ஓடையின் குறுக்கே 1 கோடியே 52 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தடுப்பணை என மொத்தம் 16 கோடியே 56 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தலைமைச் செயலாளர் க.சண்முகம், பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ௧. மணிவாசன், நீர்வள ஆதாரத் துறை முதன்மை தலைமைப் பொறியாளர் மற்றும் பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் (பொது) கு. இராமமூர்த்தி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.