நீட் தேர்வு தேர்ச்சி பட்டியலில் 15-வது இடத்துக்கு முன்னேறிய தமிழ்நாடு
By: Monisha Sat, 17 Oct 2020 09:19:09 AM
மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகியது. தமிழகத்தில் நீட் தேர்வுக்கு 1.21 லட்சம் பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். ஆனால் நீட் தேர்வை 99 ஆயிரத்து 610 பேர் எழுதினார்கள். இந்நிலையில் இந்த ஆண்டு மாநில அளவில் தேர்ச்சி சதவீதம் அதிகரித்து உள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வை 1 லட்சத்து 23 ஆயிரத்து 78 பேர் எழுதினார்கள். இதில் 59 ஆயிரத்து 785 பேர் தகுதி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 48.57 சதவீதமாக இருந்தது. அப்போது மாநில அளவில் 23-வது இடம் தமிழ்நாட்டுக்கு கிடைத்தது.
இந்த ஆண்டு தமிழ்நாட்டில் நீட் தேர்வை 99 ஆயிரத்து 610 பேர் எழுதினார்கள். கடந்த ஆண்டை விட குறைவானவர்கள் தேர்வை எழுதியிருந்தாலும் தேர்ச்சி சதவீதம் அதிகரித்து உள்ளது. இந்த ஆண்டு 57.44 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதன் மூலம் கடந்த ஆண்டு 23-வது இடத்தில் இருந்த தமிழ்நாடு, தேர்ச்சி பட்டியலில் 15-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது. கடந்த ஆண்டு கடைசி இடம் பிடித்த நாகலாந்து, இந்த ஆண்டும் கடைசி இடத்தை தக்க வைத்துள்ளது.