தமிழகத்தில் செப்.20 வரை மழை பெய்யக்கூடும்
By: vaithegi Thu, 14 Sept 2023 3:31:51 PM
சென்னை: நேற்று (13.09.2023) காலை வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது, இன்று (14.09.2023) காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஒரிசா பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 2 தினங்களில் ஒரிசா மற்றும் சத்தீஸ்கர் பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை முதல் வருகிற 20.09.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
மேலும் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.