கொரோனா வைரஸ் காரணமாக கோடை கால நோயிலிருந்து தப்பித்த தமிழக மக்கள்
By: Monisha Tue, 26 May 2020 10:32:58 AM
தமிழகத்தில் ஏப்ரல், மே மாதங்கள் கோடை காலமாகும். இந்த ஆண்டு பருவமழை போதுமான அளவு பெய்யாத நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் அக்னி நட்சத்திரம் தொடங்கியதில் இருந்து வெப்பத்தின் தாக்கம் பல நகரங்களில் 100 டிகிரியை தாண்டி பதிவாகி வருகிறது.
மேலும் ‘அம்பன்’ புயல் காரணமாக தமிழகத்துக்கு மழை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதுவும் ஏமாற்றத்தில் தான் முடிந்தது. மேலும், திசைமாறி சென்ற ‘அம்பன்’ புயல் நிலப்பரப்பில் இருந்து ஈரப்பதத்தை இழுத்து சென்றதால், வழக்கத்தை விட 2 அல்லது 3 டிகிரி வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டு விட்டது.
இந்தநிலையில் அக்னி நட்சத்திரம் வருகிற 28-ந்தேதியோடு நிறைவடைகிறது. இருந்தாலும் அதற்கு பிறகு ஒரு சில நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் இருக்கத்தான் செய்யும் என்று வானிலை துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
அக்னி நட்சத்திர காலங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், உடலில் அதிக அளவில் வியர்வை வெளியேறும். இதனால் உப்புச்சத்து மற்றும் நீர் சத்து குறைவு ஏற்படும். அதிக அளவில் தாகம், உடல் சோர்வு, தலைவலி, தசை பிடிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும். பொதுவாக அக்னிநட்சத்திரம் காலங்களில் கழுத்துப்பகுதியில் வீக்கம் என்ற அம்மைக்கட்டு, மற்றும் அக்கி உள்ளவர்களுக்கு உடலில் சிறிய மற்றும் பெரிய அளவிலான கொப்பளங்கள் காணப்படும்.
அதேபோல் தோல் நோய் போன்றவை ஏற்படுவது வழக்கம். ஆனால் தற்போது இதுபோன்ற எந்த நோய்களுக்கும் பொதுமக்கள் சிகிச்சை பெற மருத்துவமனை பக்கமே வரவில்லை. அனைத்துக்கும் காரணம் கொரோனா தான் என்று அரசு மருத்துவர்கள் கூறுகின்றனர்.