- வீடு›
- செய்திகள்›
- டெங்கு கொசுப்புழு ஒழிப்பு தூய்மைப்பணிகள் குறித்து தஞ்சை மாநகராட்சி ஆணையர் திடீர் ஆய்வு
டெங்கு கொசுப்புழு ஒழிப்பு தூய்மைப்பணிகள் குறித்து தஞ்சை மாநகராட்சி ஆணையர் திடீர் ஆய்வு
By: Nagaraj Tue, 12 Sept 2023 2:49:59 PM
தஞ்சாவூர்: டெங்கு கொசுபுழு ஒழிப்பு மற்றும் தூய்மைப்பணிகள் குறித்து தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தஞ்சாவூர் மாநகராட்சியின் கீழ் பொது சுகாதாரம் பிரிவு 14 கோட்டங்கள் இயங்கி வருகிறது. இதில் மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் டெங்கு கொசுபுழு ஒழிப்பு மற்றும் தூய்மை பணிகளை முல்லை தெரு,சுந்தரம் நகர், தைக்கால் தெரு, பர்மா காலனி, மேல் லைன் மற்றும் பூக்கார தெரு ஆகிய இடங்களில் மாநகர்நல அலுவலர் டாக்டர் வீ.சி. சுபாஷ் காந்தி மற்றும் துப்புரவு ஆய்வாளர்களுடன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தஞ்சாவூர் மாநகராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான நன்னீர் தேங்கக்கூடிய தேங்காய் சிரட்டை, டயர்கள், உடைந்த மட்பாண்டங்கள், அகல் விளக்குகள், பிளாஸ்டிக் கப்புகள், நீர் சேகரிப்புத் தொட்டிகள், பூந்தொட்டிகள் போன்றவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என்று இம்மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து அரசு அலுவலங்கள், பள்ளிகள், சத்துணவு மையங்கள், அரசு போக்குவரத்து கழக பணிமனை அலுவலகங்கள் ஆகியவற்றிருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாநகராட்சிக்குட்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் சிகிச்சைக்காக வருபவர்களின் விபரங்களை மாநகராட்சிக்கு மின் அஞ்சல் மூலமாக தினந்தோறும் தெரிவிக்கப்பட்டு அவ்வாறு பெறப்படும் அறிக்கைக்குகிணங்க மருத்துவ முகாம்கள் அமைத்தும், தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் வருகிறது.
மேலும் நீண்ட நாட்கள் பள்ளிக்கு வராமல் விடுப்பிலுள்ள மாணவர்களின் விசாலத்தினை சம்பந்தபட்ட துப்புரவு ஆய்வாளர்களுக்கு தெரிவித்திட கடிதம் அனுப்பட்டுள்ளது. இம்மாநகராட்சிக்குட்ட பகுதிகளில் உள்ள சத்துணவு மையங்களில் கொசுபுழு உற்பத்தியாகும் கலன்களை அப்புறப்படுத்திடவும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பின்பற்றாவிடில் தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939 கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டு, அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.