சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1-ந் தேதி முதல் கட்டணம் உயர்வு
By: Monisha Tue, 25 Aug 2020 2:30:02 PM
தமிழகத்தில் சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1-ந் தேதி முதல் கட்டணத்தை உயர்த்த இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தமிழகத்தில் 48 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் ஆண்டுக்கு ஒருமுறை கட்டணம் திருத்தியமைக்கப்பட்டு அமல்படுத்தப்படுவது வழக்கம். ஒரு பகுதி சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ந் தேதி முதலும், மற்றொரு பகுதி சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1-ந் தேதி முதலும் கட்டணம் உயர்த்தப்படும்.
அந்தவகையில், கடந்த ஏப்ரல் மாதம் 1-ந் தேதி தமிழகத்தில் உள்ள 26 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டது. ஆனால், கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள காரணத்தால் கட்டண உயர்வு சில நாட்களுக்கு பிறகு நடைமுறைக்கு வந்தது.
இந்தநிலையில் தமிழகத்தில் மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1-ந் தேதி முதல் கட்டணத்தை உயர்த்த இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது. இங்கு கட்டணங்கள் வாகனங்களுக்கு ஏற்றவாறு ரூ.5 முதல் ரூ.15 வரை உயர்த்தப்பட உள்ளது.
அதன்படி, திருச்சி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் திருச்சி-கரூர், திருச்சி-சென்னை, திருச்சி-திண்டுக்கல் ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணங்கள் திருத்தியமைக்கப்பட்டுள்ளன.
தற்போது உயர்த்தப்பட்டுள்ள கட்டணங்கள் வருகிற 1-ந் தேதி முதல் அடுத்த ஆண்டு ஆகஸ்டு 31-ந் தேதி வரை அமலில் இருக்கும் என இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.