மதுபானங்களின் விலையை உயர்த்த டாஸ்மாக் நிர்வாகம் திட்டமிடல்
By: vaithegi Wed, 04 Oct 2023 3:08:34 PM
சென்னை: தமிழகத்தில் உள்ள மதுக்கடைகளை நவீனமயமாக்க அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கையினை மேற்கொண்டு வருகிறது. இதற்கு இடையே, கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் தமிழகம் முழுவதும் 500 மதுக்கடைகள் மூடப்பட்டது.
இதனால், ஏற்பட்ட பொருளாதார சரிவை சரிக்கட்டும் விதமாகவும், மது தயாரிப்பிற்கான உற்பத்தி செலவு அதிகரித்த காரணத்தினாலும் மதுபானங்களின் விலையை அதிகரிக்க அரசு திட்டமிட்டு உள்ளது.
எனவே அதன்படி, மதுவகை மற்றும் அளவை பொறுத்து ரூ.5 முதல் ரூ.50 வரையிலும் மதுபானங்களின் விலை உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது, குவார்ட்டர் பாட்டிலுக்கு ரூ.5 உயர்த்தப்படும் என்றும், நடுத்தர வகை மது பாட்டிலுக்கு ரூ.10 உயர்த்தப்படும் எனவும், உயர் வகை மது பாட்டிலுக்கு ரூ.20 உயர்த்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், ஓரிரு வாரங்களில் இந்த மதுபான விலை உயர்வு அமல்படுத்தப்படும் எனவும் டாஸ்மாக் நிர்வாகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தொடர்ந்து மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டு வருவதால் மது பிரியர்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர். மேலும், தமிழக அரசின் திட்டத்தின் படி மதுபான கடைகள் நவீனமயமாக்கப்பட்டால் இன்னும் மது விலை உயர வாய்ப்புள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.