5 மாதங்களுக்கு பின் திறக்கப்பட்ட டாஸ்மாக்; எதிர்பார்த்த அளவு மக்கள் வரத்து இல்லை
By: Nagaraj Wed, 19 Aug 2020 09:15:46 AM
டாஸ்மாக்-ல் கூட்டம் இல்லை... சென்னையில் 5 மாதங்களுக்குப் பிறகு டாஸ்மாக் கடைகள் நேற்று திறக்கப்பட்டன.
கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 24-ம் தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டதால், தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதைத் தொடர்ந்து, கொரோனா பரவல் அதிகம் இருந்த சென்னையை தவிர்த்து தமிழகத்தின் பிற பகுதிகளில் 3,600 டாஸ்மாக் கடைகள் கடந்த மே மாதம் திறக்கப்பட்டன.
இந்தச் சூழலில், கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருவதால் சென்னை மண்டலத்தில் 5 மாதங்களுக்கு பிறகு 720 டாஸ்மாக் கடைகள் நேற்று காலை திறக்கப்பட்டன. டாஸ்மாக் கடைகளின் முன்பு, மது வாங்க வருபவர்கள் வரிசையில் நிற்க கட்டைகள் கட்டப்பட்டிருந்தன. மேலும், 3 அடி இடைவெளி விட்டு வட்டங்கள் வரையப்பட்டிருந்தன.
மயிலாப்பூர் பறக்கும் ரயில் நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளில் நேற்று
காலை 9 மணி முதல் டோக்கன் விநியோகம் தொடங்கியது. டோக்கன் வாங்க
வந்தவர்களுக்கு கைகழுவும் திரவத்தால் கைகளை சுத்தம் செய்த பிறகு டோக்கன்
வழங்கப்பட்டது. முகக்கவசம் இல்லாமல் வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
சென்னையில்
நீண்ட நாட்களுக்குப் பிறகு டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதால், மதுபானங்ளை
வாங்க வந்த ஒருவர் அனைவருக்கும் இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை
வெளிப்படுத்தினார். 100-க்கும் மேற்பட்டோர் வரிசையில் நின்று, தனிமனித
இடைவெளியைப் பின்பற்றி மதுபானங்களை வாங்கிச் சென்றனர். மதுக்கடைகள் முன்பு
போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மது வாங்க
வருபவர்கள் விதிமுறைகளை பின்பற்றி மதுபானங்களை வாங்கிச் செல்லும்படி
ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்து அறிவுறுத்தி வந்தனர். இதேபோல், எழும்பூர்
ரயில் நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் கடை உள்ளிட்ட ஒரு சில கடைகளில் பலரும்
வரிசையில் நின்று மதுபானங்களை வாங்கிச் சென்றனர். நீண்ட நாட்களுக்கு பிறகு
டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால் 5, 6 மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கிச்
சென்றனர். இருப்பினும், கோடம்பாக்கம் ரங்கராஜபுரம், டாக்டர் அம்பேத்கர்
சாலை, பெரம்பூர், ஓட்டேரி, பட்டாளம், துரைப்பாக்கம் உட்பட பெரும்பாலான
இடங்களில் செயல்படும் டாஸ்மாக் கடைகளில் அதிக அளவுக்கு கூட்டம் வரவில்லை.
போதிய
வருமானம் இல்லாதது, சென்னை மாவட்டத்தையொட்டிய பகுதிகளில் செயல்படும்
கடைகளுக்கு சென்று மதுபானங்களை வாங்கி அருந்தி வந்தது உள்ளிட்ட பல்வேறு
காரணங்களால் நேற்று டாஸ்மாக் கடைகளில் எதிர்பார்த்த அளவு கூட்டமின்றி
காணப்பட்டதாக கூறப்படுகிறது.