டிடிஎஃப் வாசன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்த நிலையில், மனு தள்ளுபடி
By: vaithegi Thu, 21 Sept 2023 3:42:01 PM
சென்னை: பிரபல யூடியூபரான டிடிஎஃப் வாசன் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பாலு செட்டி சத்திரம் அருகே பைக்கில் சென்ற போது வீலிங் செய்ய முயன்றதில் நிலை தடுமாறு கீழே விழுந்து விபத்தில் சிக்கினார். இதனை அடுத்து உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனம் இயக்கியது, கவனக்குறைவாகச் செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் (IPC 279/337), டி.டி.எஃப் வாசன் மீது பாலுசெட்டி சத்திரம் போலீஸ் வழக்கு பதிவு செய்தது.
டிடிஎஃப் வாசன் மீது ஏற்கனவே 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ள நிலையில் மேலும் 3 பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளது. பிணையில் வர முடியாத பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
மேலும் அவரது ஓட்டுநர் உரிமத்தையும் ரத்து செய்யவும் போக்குவரத்து ஆணையரகம் பரிந்துரை செய்துள்ளது. இதற்கு இடையே டிடிஎஃப் வாசனுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து காஞ்சிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி இனியா கருணாகரன் உத்தரவிட்டார்.
இந்நிலையில், டிடிஎஃப் வாசன் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்த நிலையில், அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. காஞ்சிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் டிடிஎஃப் வாசன் ஜாமீன் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், மனுவை விசாரித்த நீதிபதி செம்மல் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.