தொழில்நுட்ப கோளாறு... ஓடுபாதையில் இருந்து விலகி மண்ணில் சறுக்கி சென்ற விமானம்
By: Nagaraj Fri, 29 July 2022 5:07:09 PM
அசாம்: அசாம் மாநிலத்தில் உள்ள ஜோர்ஹாட் (Jorhat) விமான நிலையத்தில் இருந்து 98 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி, அருகே இருந்த மண்ணில் சறுக்கிச் சென்றது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அசாமில் இருந்து புறப்பட்ட விமானமே இதுபோன்று விபத்தில் சிக்கியது. இதனால், பயணிகளுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜோர்ஹாட் - கொல்கத்தா வழித்தடத்தில் இயக்கப்படும் இண்டிகோ 6E757 விமானத்தில் திடீர் “தொழில்நுட்பக் கோளாறு” காரணமாக இந்த விபத்து நேரிட்டுள்ளது. விமானத்தில் ஏற்பட்ட இந்த விபத்து காரணமாக அதன் ஒரு ஜோடி சக்கரங்கள் சேறும் சகதியுமாக இருந்த புல்வெளிக்குள் சிக்கியதாகவும், நல்வாய்ப்பாக விமானம் நிறுத்தப்பட்டதால் பயணிகள் உயிருக்கு எந்த ஆபத்தும் நிகழவில்லை என்றும் இந்திய விமான நிலைய ஆணையத்தின் (AAI) அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாக இண்டிகோ ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது. இருப்பினும் இந்த சம்பவம் பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.