தவறான சிகிச்சையால் இளம்பெண் மரணம்... இழப்பீடு வழங்காததால் உறவினர்கள் முற்றுகை
By: Nagaraj Sat, 01 Oct 2022 10:37:56 AM
கரூர்: இழப்பீடு தருவதாக ஒப்புக்கொண்ட தனியார் மருத்துவமனை நிர்வாகம் இழப்பீடு வழங்காததை கண்டித்து உறவினர்கள் மருத்துவமனை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மாவட்டம், மணவாசி கிராமத்தை சேர்ந்தவர் வளர்மதி (21) இவரது கணவர் பாலமுருகன். இவர்களுக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. வளர்மதிக்கு கர்ப்பப்பையில் நீர்க்கட்டி இருந்ததால் அதனை அகற்றுவதற்காக கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி கரூர் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது.
அறுவை சிகிச்சைக்கு பிறகு சர்க்கரையின் அளவு சரிவர இல்லாததால், மேல் சிகிச்சைக்காக கடந்த 5ம் தேதி கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்து அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.
கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது ஏற்கனவே அவர்
இறந்து விட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவித்துள்ளனர். ஆனால், கரூர்
தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சையை தவறாக செய்ததன் காரணமாகவே
வளர்மதி உயிரிழந்துள்ளார் என்று கூறி, மருத்துவமனைக்கு எதிராக அவரது
உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது போலீசார்
பாதுகாப்புடன் இருதரப்பினர் இடையே பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.
மருத்துவமனை தரப்பில் வளர்மதி குடும்பத்திற்கு இழப்பீடு தருவதாக
தெரிவிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதனால் அந்த பிரச்சனை தற்காலிகமாக
முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில் தனியார் மருத்துவமனை தரப்பில் வளர்மதி
குடும்பத்தினருக்கு இழப்பீடு தருவதாக ஒப்புக்கொண்ட தொகை இன்னும்
கொடுக்கவில்லை என்று கூறி அவரது உறவினர்கள் மீண்டும் மருத்துவமனையை
முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இருதரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.