தற்காலிக ஆசிரியர்கள் விண்ணப்பம், தமிழக அரசு நீதிமன்றத்தில் தகவல்..
By: Monisha Sat, 09 July 2022 9:12:55 PM
தமிழ்நாடு: தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்காக விண்ணப்பித்த ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்டவர்களில், 28,984 பேர் மட்டுமே ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக தமிழக பள்ளி கல்வி துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இரண்டாம் நிலை ஆசிரியர் பணிக்காக 8 ஆண்டுகள் காத்திருந்தும் பணி வழங்கப்படவில்லை எனவும், பள்ளி நிர்வாக குழு மூலம் தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்வது இயற்கை விதிக்கு முரணானது என்றும் கூறி ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த ரவி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.கிருஷ்ணகுமார், தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்களில் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி உள்ளிட்ட தகுதியுடன் வரும் விண்ணப்பங்களை முன்னுரிமை அடிப்படையில் பரிசீலிக்கும் பணியை நடத்தலாம், பட்டப்படிப்பை மட்டும் முடித்தவர்கள், இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணியாற்றுபவர்கள் ஆகியோர் விண்ணப்பித்தால் அவர்களின் விண்ணப்பங்கள் மீது முடிவெடுக்கக்கூடாது என பள்ளிக்கல்வித் துறை இயக்குனர் திருத்தப்பட்ட சுற்றறிக்கையை வெளியிட வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் ஆர். சண்முகசுந்தரம் ஆஜராகி, தேர்வு நடைமுறைகளில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை தெரிவிப்பதற்காக வழக்கை தள்ளிவைக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.
அதனை ஏற்று வழக்கின் விசாரணையை ஜூலை 15ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அதுவரை தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்களில், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்களை மட்டும் பரிசீலிக்க வேண்டுமென மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளார்.