- வீடு›
- செய்திகள்›
- கொரிய தகவல் தொடர்பு அலுவலகம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டதால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம்
கொரிய தகவல் தொடர்பு அலுவலகம் குண்டு வைத்து தகர்க்கப்பட்டதால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம்
By: Karunakaran Wed, 17 June 2020 12:03:11 PM
வடக்கு மற்றும் தென் கொரியா இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் முரண்பாடுகளை அகற்ற உலக நாடுகள் முயற்சி செய்து வருகின்றன. இருப்பினும், இந்த பிரச்சனைக்கு வெகு ஆண்டுகளாக தீர்வு காணமுடியவில்லை. இந்நிலையில், வட கொரிய அதிபர் கிம் ஜங் உன்னின் சகோதரி யோ ஜோங் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கொள்ள தொடங்கியுள்ளார்.
யோ ஜோங் ஆட்சி அதிகாரம் குறித்து இதுவரை யாரும் எந்த விவரமும் அறியவில்லை. அதிபர் கிம் ஜங் உன்னை விட இவர் மிகவும் ஆக்ரோஷமான முடிவுகளையே எடுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தென்கொரிய எல்லையில் இருந்து வடகொரிய ஆட்சிக்கு எதிரான எழுத்துக்களுடன் பலூன்கள் பறக்கவிடப்பட்டன. உள்நாட்டிலேயே வடகொரியாவுக்கு எதிராக துண்டு பிரசுரங்கள் வெளியிடப்படுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதன் காரணமாக வடகொரியா தென்கொரியாவுடனான அனைத்து தொடர்புகளையும் துண்டித்தது. 2018 ஆம் ஆண்டு வடகொரியாவின் ஹேசாங் நகரில் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேம்படுத்த தென்கொரியாவின் செலவில் கொரிய தகவல் தொடர்பு கட்டிடம் ஒன்று கட்டப்பட்டது. தற்போது, இரு நாட்டு உறவையும் வலுப்படுத்தும் விதகாக உருவாக்கப்பட்ட அந்த கட்டிடத்தை வடகொரியா குண்டு வைத்து தகர்த்துள்ளது.
தனது எதிரி நாடாக கருதும் தென்கொரியாவை வடகொரியா எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த கட்டிடம் இதற்கு முன்னதாக வட மற்றும் தென் கொரிய நாட்டினர் இரு நாட்டு உறவை மேம்படுத்த முக்கிய பங்காற்றியது குறிப்பிடத்தக்கது.