முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டை ஆசிரியர்கள் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு
By: Nagaraj Tue, 15 Dec 2020 8:27:35 PM
ஆசிரியர்கள் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு... சென்னை பசுமைவழி சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டை ஆசிரியர்கள் முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடந்த ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் 2,144 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் 329 பேருக்கு மட்டும் இதுவரை பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை. இதில், 40-க்கும் மேற்பட்டோர் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் சென்னை வந்துள்ளனர்.
இந்நிலையில், தங்களுக்கு பணி நியமன ஆணை வழங்கக்கோரி சென்னையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டை முற்றுகையிட முயன்றனர். மறியல் செய்தவர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து, முதல்வரின் தனிப்பிரிவு அலுவலர்களிடம் ஆசிரியர்கள் மனு
அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள்,
டெட் தேர்வு சான்றிதழ் ஆயுள் முழுவதும் செல்லும் என தேசிய ஆசிரியர்
கல்விக்குழுமம் ஏற்கனவே அறிவித்துள்ளது.
எனவே, முதல்வர் எடப்பாடி
பழனிசாமி, இந்த விவகாரத்தில் உடனே தலையிட்டு தங்களுக்கு பணி நியமன ஆணை
வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.