இந்தோனேசியாவின் புளோரஸ் தீவில் பயங்கர நிலநடுக்கம்
By: Karunakaran Thu, 16 July 2020 3:53:45 PM
இந்தோனேசியாவின் மேற்கு பகுதியில் புளோரஸ் தீவு அமைந்துள்ளது. இந்நிலையில், புளோரஸ் தீவில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. புளோரஸ் தீவில் உள்ள ருடெங் நகரை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 600 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ருடெங் நகரம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் காரணமாக அங்குள்ள வீடுகள் கடைகள் போன்ற கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் அலறியடித்தபடி வீடுகளை விட்டு வெளியேறினர். அதன்பின், அங்கிருந்த மக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
இந்த நிலநடுக்கம் சக்தி வாய்ந்ததாக இருந்தாலும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உடனடி தகவல்கள் இல்லை. இந்தோனேசியா நாடு புவித்தட்டுகள் அடிக்கடி நகரும் இடத்தில் உள்ளதால், அங்கு நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கமான ஒன்றாகும்.