ஜம்மு காஷ்மீரில் ரோந்து சென்ற சிஆர்பிஎப் வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்
By: Karunakaran Wed, 01 July 2020 2:13:22 PM
ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளனர். இவர்கள் அடிக்கடி பாதுகாப்பு படையினரை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் இவர்களை அழிக்க ராணுவம், உள்ளூர் போலீஸ் இணைந்த கூட்டுப்படை தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் உள்ள சோபூரின் மாடல் டவுன் பகுதியில் சிஆர்பிஎப் வீரர்கள் இன்று ரோந்து சென்றனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் சிஆர்பிஎப் வீரர்களை குறிவைத்து திடீர் தாக்குதல் நடத்தினர். பயங்கரவாதிகள் சிஆர்பிஎப் வீரர்களை குறிவைத்து கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினர்.
இந்த துப்பாக்கி சூட்டில் ஒரு சிஆர்பிஎப் வீரர் மற்றும் பொதுமக்களில் ஒருவர் என இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும் 3 வீரர்கள் காயமடைந்தனர். காயமடைந்த வீரர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் விரைந்து சென்றனர்.
தற்போது அங்கு பதுங்கியுள்ள பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் தேடி வருகின்றனர். இதனால் அந்த பகுதியினை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.