நன்றி தெரிவித்தது நேபாளம்; கொரோனா தடுப்பு மருத்துவப் பொருட்கள் வழங்கியதற்காக!
By: Nagaraj Mon, 18 May 2020 10:22:52 AM
கொரோனா தொற்று நோய் சோதனைக்காக மருத்துவப் பொருட்கள், பரிசோதனை கருவிகளை தந்து உதவிய இந்தியாவுக்கு, நேபாளம் நன்றி தெரிவித்துள்ளது.
'கொரோனா' வைரசுக்கு எதிரான போரில், உலக நாடுகளுக்கு இந்தியாவின் உதவி மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. மருத்துவப் பொருட்களை தாராளமாக அளித்து வருகிறது.
இந்தியாவின் பக்கத்து நாடான நேபாளத்துக்கு, 30 ஆயிரம் கொரோனா வைரஸ் பரிசோதனை கருவிகளையும், 23 டன் மருந்து பொருட்களையும், இந்தியா நன்கொடையாக வழங்கி உள்ளது.
இவற்றை நேபாளத்துக்கான இந்திய தூதர் வினய் மோகன் சவாத்ரா, நேபாள சுகாதார அமைச்சர் பானுபக்த தக்காலிடம் நேரில் வழங்கினார். இந்நிலையில், இதற்கு நன்றி தெரிவித்து அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் பிரதீப் கயாவாலி, சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு:
'கொரோனா' வைரஸ் பரவலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு தேவையான, சில மருந்துகள், மருத்துவப் பொருட்கள், பரிசோதனை கருவிகளை பரிசாக அளித்த, இந்தியாவுக்கு, நெஞ்சார்ந்த நன்றி. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.