அதெல்லாம் இல்லை... பிரமாண்ட திருமண சர்ச்சைக்கு அமைச்சர் வைத்த முற்றுப்புள்ளி
By: Nagaraj Sun, 18 Sept 2022 6:53:14 PM
மதுரை: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்... மதுரையில் சமீபத்தில் அமைச்சர் மூர்த்தி இல்லத் திருமணம் மிகப்பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.
மதுரை பாண்டி கோயில் அருகேயுள்ள மைதானத்தில் நடைபெற்ற அமைச்சர் மூர்த்தியின் மகன் திருமண விழாவுக்கு, கோட்டை போன்ற பிரமாண்ட நுழைவு வாயில், பல்லாயிரக் கணக்கானோர் அமரும் வகையில் பந்தல், ஒரே நேரத்தில் 10 ஆயிரம் பேர் சாப்பிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு ஊரே வியக்கும் அளவுக்கு விருந்து அளிக்கப்பட்டது.
கல்யாணத்திற்கு வந்த தொண்டர்கள், பொதுமக்கள் வயிறாரச் சாப்பிட்டு வாழ்த்திய நிலையில், இதுவே அமைச்சர் மூர்த்திக்கு தலைவலியையும் ஏற்படுத்தியது. திருமண அரங்கத்துக்கு வரும் வழி நெடுக ஆயிரக்கணக்கான கரும்புகளும், குலை வாழைகளும், தென்னக் குலைகளும் கட்டப்பட்டிருந்ததும், சாப்பிடும் அரங்கம் மிகப் பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருந்ததும், இந்த திருமணத்திற்கு ரூ. 100 கோடி செலவானதாமே, இல்லை 120 கோடியாம் என யூகங்களை கிளப்பிவிட்டது.
அமைச்சர் மூர்த்தி இல்லத் திருமணம் 120 கோடி செலவில் நடந்ததாக பரவிய தகவலை கப்பென பிடித்த அதிமுகவினர், முதல் முறை அமைச்சராக இருக்கும் மூர்த்திக்கு, தனது மகன் திருமணத்தை நூறு கோடியில் எப்படி நடந்த முடிந்தது என கேள்விக்கணைகளைத் தொடுத்தனர். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலரும் அமைச்சர் மூர்த்தி இல்லத் திருமணம் நடத்தப்பட்ட விதம் குறித்து விமர்சித்திருந்தனர்.
சமூக ஊடகங்களிலும் அமைச்சர் இல்லத் திருமணம் ட்ரெண்ட் ஆனது.
பிரமாண்டமாக நடந்தது ஒருபக்கம் என்றால், அதற்கு இவ்வளவு பட்ஜெட்டாமே என
பரவிய தகவல்களால் அமைச்சர் மூர்த்தி அப்செட் ஆனார். இது திமுக அரசுக்கும்
கெட்ட பெயரை ஏற்படுத்தி விடும் என்பதால் கொஞ்சம் கவலையுற்ற மூர்த்தி, தன்
மகன் திருமணம் பற்றி பரவும் தகவல்களுக்கு செய்தியாளர் சந்திப்பிலேயே
விளக்கம் கொடுத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
செய்தியாளர்களைச்
சந்தித்துப் பேசிய அமைச்சர் மூர்த்தி, "திமுக முப்பெரும் விழாவுக்கு
போடப்பட்ட அதே செட் தான் என் மகன் திருமணத்துக்காக மதுரையில் போடப்பட்டது.
அந்த செட் போட எவ்வளவு ஆகும் என்று, அவர்களிடமே கேளுங்கள். என் மகன்
திருமணத்தின்போது பொதுமக்களுக்கு ஏதாவது இடையூறு ஏற்பட்டதா? யாராவது ஏதாவது
சொல்கிறார்கள் என்பதற்காக அது உண்மையாகிவிடுமா? கல்யாணத்துக்குப் போய்
அவ்வளவு செலவழிப்பார்களா?
சாப்பாடு
எல்லோருக்கும் பாகுபாடு இல்லாமல் போடப்பட்டது. உயர்மட்டம், சாதாரண
மனிதர்கள் என பார்க்காமல், விஐபிகள், தொண்டர்கள் என அனைவருக்கும் ஒரே
மாதிரியான உணவு பரிமாறப்பட்டது. கல்யாணத்திற்கு வருபவர்கள் காத்திருக்காமல்
சாப்பிட்டுவிட்டு செல்ல வேண்டும் என்பதற்காகவே பெரிய பந்தல் கூடம்
அமைக்கப்பட்டு உணவு பரிமாறப்பட்டது. கல்யாணத்திற்கு எல்லா செலவுகளும்
மினிமம் ஆகவே செய்யப்பட்டது. அதை மிகைப்படுத்தி சொல்கிறார்கள்.
யாரும்
சாப்பிடுவதற்காக காத்திருக்கக் கூடாது. அனைவரையும் ஒன்றாக அமர வைத்து
சாப்பிட வைக்க வேண்டும் என்பது தான் எனது எண்ணம். அதைத்தான் செய்தேன்.
மக்கள் தங்கள் இல்ல விழாவிற்கு வந்தது போல் வந்து சென்றார்கள். அனைவரும்
வயிராற சாப்பிட்டு சென்றார்கள். அதுவே எனக்கு மகிழ்ச்சி. ஆனால் கற்பனை கூட
செய்ய முடியாத அளவிற்கு ரூ.120 கோடி செலவு என்று சொல்வதெல்லாம் முற்றிலும்
பொய்." எனத் தெரிவித்துள்ளார்.