தலைநகர் சென்னையில் நாளை 37 – வது மெகா தடுப்பூசி முகாம்
By: vaithegi Sat, 17 Sept 2022 5:04:06 PM
சென்னை: தமிழகத்தில் கடந்த ஆண்டுகளில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டது. அந்த வகையில் ஆரம்பத்தில் 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது.
அதன் பிறகு மத்திய அரசின் அனுமதியுடன் 18 வயதிற்கு மேற்பட்டோர்களுக்கும் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது 12 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கி விட்டது. இந்த தடுப்பூசிகளின் விளைவால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக குறைந்துள்ளது.
இதனை அடுத்து மக்கள் அலட்சியம் காட்டாமல் கட்டாயம் 2 டோஸ் கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி கொள்ளுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் தடுப்பூசி மையங்கள் அமைக்கப்பட்டு மக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.
இதுவரை தலைநகர் சென்னையில் மட்டும் 36 மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. எனவே இதன் மூலம் 42,61,685 பேர் கொரோனா தடுப்பூசிகளை செலுத்தி கொண்டுள்ளனர். அதனை தொடர்ந்து நாளை சென்னையில் 2000 இடங்களில் 37 – வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது.
அதனால் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபர்கள் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய நபர்கள் அனைவரும் மெகா தடுப்பூசி முகாமில் கலந்து கொண்டு தடுப்பூசிகளை செலுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் வரும் 30 ம் தேதி வரை இலவசமாக பூஸ்டர் டோஸ் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.