ஜனாதிபதி டிரம்புடன் 3வது சந்திப்பு நடைபெற வாய்ப்பில்லை; வடகொரியா தகவல்
By: Monisha Sat, 11 July 2020 10:53:20 AM
சிங்கப்பூரில் கடந்த 2018-ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னும் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது, கொரிய தீபகற்பம் அணு ஆயுதமற்ற பிரதேசமாக மாற்றப்படும் என கிம் ஜாங் அன், டிரம்புக்கு உறுதி அளித்தார். இதையடுத்து, இருநாட்டு உறவில் நீண்டகாலமாக நிலவி வந்த பதற்றம் தணிந்து இணக்கமான சூழல் உருவானது.
வடகொரியா தனது வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளை அடியோடு நிறுத்தியது. இதற்கு கைமாறாக அமெரிக்கா தங்கள் மீது விதித்த பொருளாதார தடைகளை முழுமையாக திரும்பப்பெறவேண்டும் என வடகொரியா எதிர்பார்த்தது. ஆனால் அணு ஆயுதங்களை முழுமையாக கைவிடாத வரையில் பொருளாதார தடைகளை திரும்பப்பெற முடியாது என்பது அமெரிக்காவின் நிலைப்பாடாக அமைந்தது.
இது தொடர்பாக இருநாட்டு தலைவர்களும் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வியட்னாமில் 2வது முறையாக சந்தித்து பேசியபோதும் உடன்பாடு ஏற்படவில்லை.
இதன் காரணமாக இரு நாடுகளின் உறவில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. எனினும் அணு ஆயுத விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி டிரம்ப் மற்றும் கிம் ஜாங் அன் இடையே விரைவில் 3வது சந்திப்பு நடைபெறும் என அமெரிக்கா தரப்பில் கூறப்படுகிறது.
ஆனால் வட கொரியா இதனை தொடர்ந்து மறுத்து வருகிறது. இந்த ஆண்டு டிரம்ப்- கிம் ஜாங் அன் இடையே சந்திப்பு நடைபெற வாய்ப்பில்லை என கிம் ஜாங் அன்னின் சகோதரி கிம் யோ ஜாங் தெரிவித்துள்ளார். மேலும் உயர் மட்ட பேச்சு வார்த்தைக்கு ஈடாக அமெரிக்கா வடகொரியாவுக்கு எந்த வெகுமதியையும் வழங்காதபோது கிம் ஜாங் அன்னும் அதை செய்வதற்கு எந்த காரணமும் இல்லை எனவும் கிம் யோ ஜாங் கூறினார்.