- வீடு›
- செய்திகள்›
- மக்களுக்கு குறைந்தபட்ச நிவாரணத்தைக்கூட அ.தி.மு.க. அரசு கொடுக்கவில்லை - மு.க.ஸ்டாலின்
மக்களுக்கு குறைந்தபட்ச நிவாரணத்தைக்கூட அ.தி.மு.க. அரசு கொடுக்கவில்லை - மு.க.ஸ்டாலின்
By: Monisha Tue, 02 June 2020 10:46:45 AM
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஊரடங்கை நீட்டித்து முதல்-அமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில், நோய்த்தொற்றில் இருந்து மக்களை பாதுகாத்து வருகிறோம், தேவையான நிவாரணங்களை செய்து வருகிறோம், குணமடைந்து வீடு திரும்புவோர் சதவீதம் நாட்டிலேயே அதிகம், நோய்த்தொற்றினால் ஏற்படும் உயிரிழப்புகள் மிகக்குறைவு என்று தனது கொரோனா தோல்வியை திசை திருப்பிடும் நோக்கில் கதை கதையாக அளந்திருக்கிறார்.
நோய்த்தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்கிறோம் என்றால் தமிழகத்தில் இதுவரை 22 ஆயிரத்து 333 பேருக்கு தொற்று ஏற்பட்டது எப்படி? தினமும் 500 முதல் ஆயிரத்துக்கும் மேலான எண்ணிக்கையில் நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவது தமிழ்நாட்டில்தானே? தினமும் நோய் பாதிப்பு அதிகரித்து வரும் சென்னை இருப்பதும் இந்த மாநிலத்தில்தானே?
உயிரிழப்புகள் குறைவு என்று முதல்-அமைச்சர் தனக்குத்தானே பெருமை பாராட்டிக்கொள்வது ஈவு, இரக்கமற்ற எண்ணத்தின் வெளிப்பாடு. 173 குடும்பங்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று பாராமல் இந்த எண்ணிக்கை குறைவாக தெரியுமானால் அவர்களுக்கு அதிகார நோய் ஆழமாக தாக்கியிருக்கிறது என்று பொருள். வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாதம் 5 ஆயிரம் வழங்க சொன்னேன். அந்த குறைந்தபட்ச நிவாரணத்தைக்கூட இந்த அரசு கொடுக்கவில்லை.
மாவட்ட வாரியாக பரிசோதனை, டெஸ்ட் கிட் விவரங்களை வெளியிடுவதில் அ.தி.மு.க. அரசுக்கு ஏன் இந்த மயான அமைதி? பரிசோதனை மட்டுமல்ல, மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கும் பஞ்சம் என்ற நிலைதான் இன்றைக்கு உள்ளது. 5-வது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் கூட உயிரிழக்க இந்த அரசு அனுமதிக்காது என்று கூறிய அரசுக்கு வெண்டிலேட்டர் கொள்முதலில் ஏன் இந்த அலட்சியம்? படுக்கைகள் உருவாக்குவதிலும் ஏன் இன்னமும் கூட மெத்தனம்?
ஆகவே இதுவரை அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தை தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ளும் விளம்பரத்திற்காக வீணடிக்காமல், ஜூன் மாதத்தையாவது உண்மையான மக்கள் விசுவாசத்துடன் முறையாக பயன்படுத்தி கொரோனாவை கட்டுப்படுத்தி மக்களை காப்பாற்ற எடப்பாடி பழனிசாமி தீவிரமாக முயற்சி செய்யவேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.