- வீடு›
- செய்திகள்›
- சிறையில் இருந்த 400 தலிபான் பயங்கரவாதிகளில் 391 பேரை ஆப்கானிஸ்தான் அரசு விடுதலை செய்தது
சிறையில் இருந்த 400 தலிபான் பயங்கரவாதிகளில் 391 பேரை ஆப்கானிஸ்தான் அரசு விடுதலை செய்தது
By: Karunakaran Fri, 04 Sept 2020 2:20:33 PM
ஆப்கானிஸ்தானில் நடந்து வந்த உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர அந்நாட்டு அரசின் உதவியோடு கடந்த பிப்ரவரியில் தலிபான்களுடன் அமெரிக்கா அமைதி ஒப்பந்தம் செய்துகொண்டது. அதன்படி, ஆப்கானிஸ்தான் இருந்து தனது படைகளை திரும்பப்பெற அமெரிக்க ஒப்புக்கொண்டது. மேலும் ஆப்கானிஸ்தான் சிறையில் உள்ள 5 ஆயிரம் பயங்கரவாதிகளை விடுதலை செய்யவேண்டும் என தலிபான்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டால்தான் ஆப்கானிஸ்தான் அரசுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த சம்மதம் தெரிவிப்போம் என தலிபான் பயங்கரவாதிகள் கெடு விதித்தனர். இதனால் ஆப்கானிஸ்தான் சிறையில் பலகட்டங்களாக 4 ஆயிரத்த் 600 தலிபான் பயங்கரவாதிகள் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் ஒப்பந்தத்தில் எஞ்சிய 400 பயங்கரவாதிகளை விடுதலை செய்ய ஆப்கானிஸ்தான் அரசு மறுப்பு தெரிவித்து வந்தது.
இந்த 400 பயங்கரவாதிகளும் உலகிற்கே ஆபத்தானவர்கள் என ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கானி எச்சரிக்கை விடுத்துள்ளார். இவர்களில் 150 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு தண்டனை நிறைவேற்றப்படுவதற்காக காத்திருந்தவர்கள். 44 பேர் அமெரிக்காவின் ஆபத்தானவர்கள் பட்டியலில் இடம்பெற்றவர்கள். இந்நிலையில் அமைதிப்பேச்சுவார்த்தையை கருத்தில்கொண்டு, 400 பயங்கரவாதிகளில் 391 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
எஞ்சிய 9 பேர் பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலிய நாட்டினரை கொன்ற சம்பவங்களில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் என்பதால், அவர்களை விடுதலை செய்ய அந்நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனால் அவர்களது விடுதலை நடவடிக்கை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் - தலிபான்கள் இடையேயான அமைதி பேச்சுவார்த்தை கத்தார் நாட்டில் நடைபெறலாம் என்பதால், இந்த 9 பயங்கரவாதிகளும் கத்தார் நாட்டுக்கு கொண்டு செல்லப்பட திட்டமிடப்பட்டுள்ளது.