இன்று உச்ச நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழு வழக்கு மீண்டும் விசாரணை
By: vaithegi Tue, 10 Jan 2023 10:01:21 AM
சென்னை: இன்று மீண்டும் விசாரணை .... அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் உச்சத்திற்கு வந்து எடப்பாடி பழனிச்சாமியும், ஓ. பன்னீர் செல்வமும் இரு அணியாக பிரிந்தனர். இதை அடுத்து எடப்பாடி பழனிச்சாமி பொதுக்குழுவை கூட்டி தன்னை இடைக்கால பொதுச்செயலாளர் என அறிவித்துக் கொண்டார்.அதிமுகவில் ஏற்கனவே ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் , இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி என்று இருந்த நிலையில் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை நீக்கிவிட்டு இடைக்கால பொதுச்செயலாளர் என தீர்மானம் நிறைவேற்றினார் எடப்பாடி பழனிச்சாமி.
எனவே இதற்கு ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது. கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடந்த அந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர் வைரமுத்து இருவரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர் .
இதையடுத்து இம்மேல்முறையீட்டு மனுக்களை நீதிபதிகள் மகேஸ்வரி, ரிஷிகேஷ்வராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தி கொண்டு வருகிறது.இவ்வழக்கு பல கட்ட விசாரணைக்கு பின்னர் கடந்த ஜனவரி 4ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. 3 நாட்களாக இந்த வழக்கில் பரபரப்பு வாதங்கள் நடந்து வந்தன. அதன் பின் வழக்கின் மறுவிசாரணை 10-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
எனவே அதன்படி உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வருகிறது.இன்று நடைபெற இருக்கும் விசாரணையின் போது எடப்பாடி பழனிச்சாமி தரப்பு தங்கள் வாதங்களை தொடங்க இருக்கிறார்கள். ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டு இருப்பதால் இன்றைய விசாரணையில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு வாதங்களை முன்வைக்க இருக்கிறது.