- வீடு›
- செய்திகள்›
- நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க விமானப்படை எப்போதும் தயாராக இருக்கும் - விமானப்படை தளபதி
நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க விமானப்படை எப்போதும் தயாராக இருக்கும் - விமானப்படை தளபதி
By: Karunakaran Thu, 08 Oct 2020 4:21:10 PM
இந்திய விமானப்படையின் 88ம் ஆண்டு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. அதன்படி, காசியாபாத்தில் உள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் விமானப்படை தின அணிவகுப்பு மற்றும் சாகச நிகழ்ச்சிகள் தொடங்கின. முதலில் விமானப்படை வீரர்களின் அணிவகுப்பை விமானப்படை தளபதி பதூரியா பார்வையிட்டு, மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
அப்போது பேசிய விமானப்படை தளபதி பதூரியா, நாட்டின் இறையாண்மையையும் நலன்களையும் எல்லா சூழ்நிலைகளிலும் பாதுகாக்க விமானப்படை எப்போதும் தயாராக இருக்கும் என்று கூறினார். அதன்பின், விமானப்படையின் சாகச நிகழ்ச்சி தொடங்கியது. அதிக எடை உள்ள ராணுவ சரக்குகளை சுமந்து செல்லும் சினூக் ரக ஹெலிகாப்டர்கள் முதலில் பறந்து சாசகம் செய்தது.
பின்னர் ரபேல் போன்ற விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. ஹாக்கி ஸ்டேடியத்தின் அளவை விட குறைந்த பகுதியில் ரபேல் விமானம் லாவகமாக சுழன்று, 8 வடிவத்தை உருவாக்கி சாசகம் செய்தது. இது காண்போரை வியக்க வைத்தது. தேஜாஸ் இலகுரக போர் விமானம், ஜாகுவார், மிக்-29, சுகோய்-30 விமானங்களும் அணிவகுப்பில் பங்கேற்றன.
விமானப்படை தினத்தையொட்டி ஹிண்டன் விமானப்படை தளம் விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்த விழாவில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தளபதி முகுந்த் நரவானே, கடற்படை தளபதி கரம்பீர் சிங், விமானப்படை தளபதி பதூரியா மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.