63 விமான நிலையங்களில் 198 அதிநவீன கருவிகளை பொருத்த இந்திய விமான நிலைய ஆணையம் முடிவு
By: Karunakaran Mon, 20 July 2020 12:13:34 PM
இந்தியாவில் உள்ள 100-க்கும் மேற்பட்ட விமான நிலையங்களில் பயணிகளை சோதனையிட “மெட்டல் டிடக்டர்’ எனப்படும் உலோக உணர்வுக் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. இதன் மூலம், உலோகத்தைப் பயன்படுத்தி செய்யப்பட்ட ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளை மட்டுமே கண்டறிய முடியும். உலோகம் அற்ற ஆயுதங்களை மெட்டல் டிடக்டர் மூலம் கண்டறிய முடியாது.
ஆனால் ‘பாடி ஸ்கேனர்’ எனப்படும் அதிநவீனக் கருவிகள் மூலம் உலோகம் பயன்படுத்தப்படாத ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளை கண்டறிய முடியும். இதனால் 2020ம் ஆண்டுக்குள் இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் ‘பாடி ஸ்கேனர்’ அதிநவீன சோதனைக் கருவிகளைப் பொருத்த கடந்த ஆண்டு ஜூன் மாதம் மத்திய அரசு உத்தரவிட்டது.
தற்போது, இந்தியாவில் உள்ள முக்கியமான 63 விமான நிலையங்களுக்கு 198 ‘பாடி ஸ்கேனர்’ அதிநவீனக் கருவிகளை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக இந்திய விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், இவற்றை வாங்க டெண்டர் வழங்கப்பட்டுள்ளதாகவும் 3 நிறுவனங்கள் ஏலம் எடுத்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் 19 அதிநவீன கருவிகள் பொருத்தப்பட உள்ளதாகவும், திருச்சி மற்றும் கோவை விமான நிலையங்களில் தலா 4 அதிநவீன கருவிகள் பொருத்தப்படும் எனவும் ஏ.ஏ.ஐ. தெரிவித்துள்ளது.