கொரோனாவை தடுக்கும் களிம்பு ஒன்றை உருவாக்கிய அமெரிக்க மருந்து நிறுவனம்
By: Karunakaran Sun, 23 Aug 2020 5:05:11 PM
கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் உள்ள வுகான் நகரில் கொரோனா வைரஸ் முதன் முதலாக தோன்றியது. இந்த வைரஸ் தற்போது உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்க மருந்து நிறுவனம் ஒன்று, கொரோனாவை தடுக்கும் களிம்பு ஒன்றை உருவாக்கி உள்ளது. அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் இந்த மருந்திற்கு அனுமதி அளித்தபின், இந்த களிம்பு பரிசோதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அறிக்கையில், இந்த களிம்பை தடவிக்கொண்ட 30 வினாடிகளுக்கு பிறகு எந்த வைரஸ் தொற்றும் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘டி3எக்ஸ்’ என்ற பெயரால் அழைக்கப்படும் இந்த களிம்பு குறித்து அட்வான்ஸ்டு பெனிட்ரேசன் டெக்னாலஜி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், நிறுவனருமான டாக்டர் பிரையன் ஹூபர் கூறுகையில், இந்த களிம்பு ஒரு திருப்புமுனையாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இது பெரும்பாலான சந்தர்ப்பங்களில் வைரஸ் பரவ காரணமாக உள்ள மூக்கு வழி பரவல் வாய்ப்பை குறைக்கும். இது ஒரு பெரிய விஷயம் என்று கூறியுள்ளார்.
மேலும் அவர், இது கொரோனாவுக்கு எதிரான முதல் வரிசை தற்காப்பாக இருக்கலாம். இது சக்தி வாய்ந்த மற்றும் பயனுள்ள தடுப்பு மருந்த என்று தெரிவித்துள்ளார். இந்த மருந்து பயன்பாட்டுக்கு வந்த பின், மூக்கு துவாரங்கள் மீது தடவிக்கொண்டால் அது வைரஸ் நுழைவதைத் தடுக்கும். இந்த மருந்தை வாங்குவதற்கு டாக்டர் சீட்டு கூட தேவையில்லை என்று கூறப்பட்டுள்ளது.