- வீடு›
- செய்திகள்›
- பிச்சை எடுத்து சேமித்த பணம் ரூ.10 ஆயிரத்தை கொரோனா நிவாரண நிதியாக அளித்த பிச்சைக்காரர்
பிச்சை எடுத்து சேமித்த பணம் ரூ.10 ஆயிரத்தை கொரோனா நிவாரண நிதியாக அளித்த பிச்சைக்காரர்
By: Nagaraj Mon, 18 May 2020 7:46:31 PM
கொரோனா நிவாரண நிதிக்காக தான் பிச்சை எடுத்து சேமித்த தொகை ரூ. 10 ஆயிரத்தை மதுரை கலெக்டரிடம் பிச்சைக்காரர் ஒருவர் வழங்கினார். இதையறிந்து மக்கள் அவருக்கு பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்தவர் பாண்டியன். பிச்சை எடுத்து வாழ்க்கையை நடத்தி வருகிறார். இவர் இன்று மதுரை கலெக்டரை நேரில் சந்தித்து கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 10 ஆயிரத்தை வழங்கினார்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக மதுரைக்கு வந்த அவர், நடைபாதைகளில் சாலை ஓரங்களில் தங்கியிருந்தார். இதையடுத்து தன்னார்வலர்களால் மீட்டு மதுரை மாநகராட்சி சார்பாக தங்க வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்படும் மக்களுக்காக தன்னால் இயன்ற உதவியைச் செய்ய வேண்டும் என்று விரும்பிய அவர், மதுரை மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த காய்கறிச் சந்தை, பழ சந்தை மற்றும் பூ மார்க்கெட்டுகளில் பிச்சை எடுத்து கடந்த 15 நாட்களில் ரூபாய் 10 ஆயிரத்தை சேகரித்துள்ளார்.
அந்தத் தொகையைதான் தற்போது கலெக்டரிடம் வழங்கி உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், கடந்த நாற்பதாண்டுகளாக நான் பிச்சை எடுக்கும் பணத்தில் பெரும்பகுதியை ஏறக்குறைய 400 பள்ளிகளுக்கு மேல் நாற்காலி, மேசைகள் குடிநீர் சுத்திகரிப்பான் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வழங்கி உள்ளேன்.
கொரோனா வைரஸ் தொற்றால் மக்கள் பாதிக்கப்படுவதை அறிந்து என்னால் இயன்ற உதவியை வழங்கி வருகிறேன் என்றார். இவரது இந்த செயலுக்கு மக்கள் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.