- வீடு›
- செய்திகள்›
- கர்நாடகாவில் லட்சுமண் சவதிக்கு முதல்-மந்திரி பதவி வழங்க பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல்
கர்நாடகாவில் லட்சுமண் சவதிக்கு முதல்-மந்திரி பதவி வழங்க பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல்
By: Karunakaran Wed, 29 July 2020 3:03:05 PM
கர்நாடக முதல்-மந்திரியாக உள்ள எடியூரப்பாவுக்கு 78 வயதாகிறது. இவர் பாஜகவில் மக்கள் செல்வாக்கு மிகுந்த தலைவராக உள்ளார். மேலும் அவர் பெரும்பான்மை சமூகமான லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவராக உள்ளதால், அங்கு பா.ஜனதா பலமாக உள்ளது. வட கர்நாடகத்தில் லிங்காயத் சமூகத்தினர் அதிகமாக வசிப்பதால், கர்நாடகத்தில் பா.ஜனதா அசுர பலத்துடன் உள்ளது.
பாஜகவில் 75 வயதானவர்களுக்கு ஓய்வு அளிக்கப்படுகிறது. அதன்படி தான் அத்வானி, முரளிமனோகர் ஜோஷி உள்ளிட்டோர் ஓரங்கட்டப்பட்டனர். ஆனால் 75 வயதை கடந்தாலும் எடியூரப்பா முதல்-மந்திரி பதவியில் நீடிப்பதற்கு அவருக்கு உள்ள மக்கள் செல்வாக்கு மற்றும் சாதி பலம் தான் காரணம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், கர்நாடகத்தில் அடுத்த சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள வசதியாக எடியூரப்பாவுக்கு பதிலாக அரசில் புதிய தலைமையை கொண்டுவர பாஜக மேலிடம் முடிவு செய்துள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்த லட்சுமண் சவதிக்கு துணை முதல்-மந்திரி பதவி வழங்கப்பட்டது. அது கட்சி மேலிடத்தின் முடிவு என்பதால் எடியூரப்பா உள்பட யாருமே அதுபற்றி வாய் திறக்கவில்லை.
தற்போது, எடியூரப்பாவை நீக்கிவிட்டு லட்சுமண் சவதியை முதல்-மந்திரி பதவியில் அமர்த்த கட்சி மேலிடம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்தும் பணிகளை மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத்ஜோஷி மேற்கொண்டுள்ளார். பா.ஜனதா மேலிடம் சர்வ பலம் பொருந்தியதாக இருப்பதால், எடியூரப்பா பிரச்சினையை கிளப்பினாலும் அதை எளிதாக சமாளித்துவிடலாம் என்று அக்கட்சியின் பிற தலைவர்கள் கருதுகின்றனர்.