கேரளாவில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப்பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது
By: Karunakaran Sat, 08 Aug 2020 3:01:27 PM
‘வந்தே பாரத்’ திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து இந்தியா வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்றிரவு 7.40 மணிக்கு கோழிக்கோடு கரிப்பூர் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அப்போது விபத்தில் சிக்கி விமானம் இரண்டாக உடைந்தது. மொத்தம் 191 பேர் பயணம் செய்த இந்த விமானத்தில் 2 விமானிகள் உள்பட 19 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
இதுகுறித்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லி மற்றும் மும்பையில் இருந்து மொத்தம் இரு சிறப்பு நிவாரண விமானங்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன. பயணிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் மனிதாபிமான அடிப்படையிலான உதவிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது கேரளாவில் விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கருப்பு பெட்டி கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் விபத்து ஏற்பட்டதற்கான காரணம் கண்டறிய வாய்ப்புள்ளது. மேலும், விமானிகளுக்கு இடையே நடந்த உரையாடலை பதிவு செய்த CVR கருவியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விமானத்தில் ஏதும் கோளாறு ஏற்பட்டதா என்பது குறித்து கருப்பு பெட்டியில் பதிவான தரவுகளின் அடிப்படையில் தெரிய வரும். கருப்பு பெட்டி விபத்துக்கு முன்பு பதிவான அனைத்து தரவுகளை பதிவு செய்து வைத்திருக்கும். தற்போது வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி.முரளிதரன் கோழிக்கோடு சென்றுள்ளார்.