நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியான 5 பேரின் உடல்கள் மீட்பு
By: Karunakaran Fri, 14 Aug 2020 6:23:41 PM
நேபாளத்தில் பருவமழை பொழிய தொடங்கியுள்ளது. இதனால் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதால், வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அங்குள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர இயலாத நிலை ஏற்பட்டது. மேலும், சாலைகள் முழுவதும் வெள்ளநீர் தேங்கி வாகன போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.
கனமழையால் நிலச்சரிவு சம்பவங்களும் ஏற்பட்டன. நேபாளத்தின் வடக்கு மத்திய பகுதியில் அமைந்த சிந்துபால்சோக் நகரில் லிடிமோ லாமா டோல் மற்றும் ஜுகல் கிராம பகுதிகளில் இன்று காலை நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 12க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. இதுகுறித்து தகவலறிந்த பேரிடர் மீட்பு படையினர் மற்றும் அப்பகுதி உள்ளூர்வாசிகள் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
தற்போது இந்த நிலச்சரிவில் சிக்கி பலியான 5 பேரது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும் 8 பேர் காயமடைந்து இருந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இருப்பினும் சம்பவ பகுதியை சேர்ந்த 38 பேரை காணவில்லை என்பதால், அவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
நேபாளத்தில் பெய்து வரும் தொடர் கனமழை மற்றும் நிலச்சரிவுகளால் கடந்த ஜூலை இறுதியில் 113 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 67 பேர் காயமடைந்துள்ளனர். 38 பேரை காணவில்லை என அந்நாட்டு உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.