மறைந்த மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வானின் உடல் அரசு மரியாதையுடன் தகனம்
By: Karunakaran Sat, 10 Oct 2020 4:09:46 PM
லோக் ஜன சக்தி தலைவரும் மத்திய மந்திரியுமான ராம்விலாஸ் பஸ்வான் டெல்லி மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை மேற்கொண்டார். அதன்பின் உடல் நலம் குன்றி மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, பாஜக தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பலரும் பஸ்வான் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
அனைவரது அஞ்சலிக்கு பிறகு பஸ்வானின் உடல் விமானம் மூலம், அவரது சொந்த மாநிலமான பீகாருக்கு கொண்டு செல்லப்பட்டது. பாட்னாவில் உள்ள வீட்டில் பஸ்வானின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ஏராளமான தலைவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், பஸ்வான் உடலுக்கு அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
பஸ்வான் உடலுக்கு அஞ்சலி செலுத்த பொதுமக்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. அஞ்சலி நிகழ்ச்சிக்குப் பிறகு அவரது உடல் ஜனார்த்தன் காட் பகுதிக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. ஊர்வலத்தில் ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.
பின்னர் ஜனார்த்தன் காட் பகுதியை அடைந்ததும் பஸ்வான் உடலுக்கு இறுதிச்சடங்கு செய்யப்பட்டு, முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படுகிறது. ராம்விலாஸ் பஸ்வான் பொறுப்புகள் அனைத்தும் மாற்றப்பட்டுள்ளது. அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.